Monday, October 27, 2008

தீபாவளி தீபாவளி வந்தாச்சு...

என்னங்க..... தீபாவளி வந்தாச்சு. தீபாவளி ஸ்வீட் எல்லாம் பண்ணி முடிச்சிட்டீங்களா? நான் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஒன்னு சொல்லட்டுமா?


என்னடா இது... டி.வி ல வர எல்லா சமையல் ப்ரொக்ராம்லயும் இதை காட்டுறாங்களே மறுபடியும் ஸ்வீட் ரேசிபியானு யோசிக்கிறீங்களா? இது ஸ்வீட் ரெசிபி இல்லைங்க. நம்ம பாரம்பர்யத்தை காபாத்தற ஒரு விஷயம். புரியலியா? சரி சரி.... புரியும்படி சொல்றேன். இப்ப நான் தீபாவளி லேகியம் எப்படி செய்யறதுன்னு சொல்லித் தரேன்.


தேவையான பொருட்கள்:
சுக்கு- 10 கி
மிளகு- 10 கி
ஓமம்- 100 கி
கந்தாடிப்பில்லி- 10 கி
சித்தரத்தை- 10 கி
ஏலைக்காய்- 5 கி
ஜாதிக்காய்- 1/2
அதிமதுரம்- 10 கி
வெல்லம்- 250 கி
தேன்- 50 கி
நெய்- 100 கி

செய்முறை:
மேலே சொன்ன எல்லாவற்றையும் தனித்தனியா (நெய்யும் தேனையும் தவிர) பொடி பண்ணிகோங்க. அதுல கொஞ்சம் தண்ணி விட்டு பத்து இல்ல பதினஞ்சு நிமிஷத்துக்கு ஊர வச்சுடுங்க. இந்தப் பொடிகளை எல்லாம் ஒரு பாத்திரத்துல கொட்டி ஒரு கரண்டிய வச்சு நல்லா கலந்துக்கோங்க. மறுபடியும் தண்ணீர் விட்டு அடுப்புல மிதமான சூடுல வச்சு கிளருங்க. தண்ணீர் எல்லாம் வடிஞ்சப்பரம் பாத்திரத்தை அடுப்புல இருந்து இறக்கிடுங்க. நெய்யை நல்லா சூடு பண்ணி வச்சுகோங்க. சூடான நெய்யையும் தேனையும் நம்ம கலந்து வச்ச கலவைல கொட்டிடுங்க. மறுபடியும் எல்லாத்தையும் சேத்து நல்லா மிக்ஸ் பண்ணுங்க. லேகியத்தோட பதம் வரவரைக்கும் அடுப்புல வச்சு கிளருங்க.
தீபாவளி லேக்கியம் ரெடி!



சரி லேக்கியம் ரெடி. இதை எப்படி எப்போ சாப்பிடனும்னு நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது. காலைல எழுந்ததும் எண்ணை வெச்சு தலைக்கு குளிச்சதும் வெறும் வயத்துல ஒரு ஸ்பூன் லேகியத்தை வீட்டுல இருக்குற பெரியவங்க கையால வாங்கி சாபிடனும்.

தீபாவளி அன்னிக்கு நாம நெறைய ஸ்வீட் சாப்பிடுவோம் இல்லையா? அதனால இண்டைஜெஷன் ஏற்படலாம். அதை தடுக்கத்தான் இந்த லேகியத்தை சாப்பிடுறோம்.

"ப்ரிவென்ஷன் இஸ் பெட்டெர் தான் க்யூர்" !!!

Tuesday, October 21, 2008

ஜக்கு மாமி (1)

ஜக்கு மாமியின் சாக்லேட் பர்பி:

"என்ன மாமி? யாருக்கு மெயில் அனுப்பிண்டு இருக்கேள்?", என்று கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் பங்கஜம் மாமி.

"அது ஒன்னும் இல்லடிமா. அமெரிகால இருக்குற என் பொண்ணு ரம்யாக்கு ஒரு ரெசிபி அனுபிருந்தேன். இப்போ மாபிள்ளை கிட்ட இருந்து ரிப்ளை வந்திருக்கு. பொண்ணுக்கு இவ்வளவு நன்னா சமைக்க கத்து கொடுத்ததுக்கு என்னை பாராட்டி தான் இந்த மெயில அனுப்பி இருப்பர்னு நினைக்கிறேன்".

"என்ன திடீர்னு பொண்ணுக்கு ரெசிபி எல்லாம்?", திகைத்தபடி கேட்டாள் பங்கஜம் மாமி.

"அதுவா? அவா ஆபிஸ்ல புதுசா கல்யாணம் ஆயிருக்கற கப்ல்ஸ் எட்டு பேர் சேர்ந்து நயாகரா பால்சுக்கு போறத முடிவு பண்ணி இருந்தாளாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஐடெம் கொண்டு வரதா ப்ளானாம். இவள் நான் ஸ்வீட் கொண்டு வரேன்னு சொன்னாளாம். என்கிட்டே கேட்டிருந்தா. நான் அவளுக்கு சாக்லட் பர்பி எப்படி பண்ணனும்னு ரெசிபி அனுப்சேன். அவ ஸ்வீட்டை பண்ணி கொடுத்து எல்லாரையும் அசத்தி இருப்பான்னு நினைக்கிறன்." என்று பெருமிதத்துடன் சொன்னாள் மாமி.

"நயாகராவா? அருமையான இடம் மாமி."

"ஆமாம். மிகப்பெரிய நீர்விழ்ச்சி. 176 அடி உயரம். அமெரிக்காவுக்கும் கனடா நாட்டுக்கும் நடுவுல இரண்டு நாடுகளையும் பிரிக்கிற பார்டரா அமைஞ்சிருக்கு. ரொம்ப அழகான டூரிஸ்ட் ஸ்பாட்."

"ம்ம்ம் ... நயாகராவும் சாக்லேட் பார்பியும் நல்ல காம்பினேஷன் தான் போங்கோ."

"மாமி, நானும் உங்க மாப்பிள்ளையோட பாராட்டு லெட்டரை பாக்கலாமா?", ஆவலுடன் கேட்டாள் பங்கஜம் மாமி.

"ஓஒ பேஷா பாரேன்", உரத்த குரலில் ஜக்கு மாமி கூறினாள்.

kitchenqueen@gmail.com என்ற தன் முகவரியின் இன்பாக்ஸ் இல் இருந்த லேட்டஸ்ட் மெய்லை திறந்தாள் மாமி. மாப்பிள்ளை மெயிலை படிக்கத் தொடங்கினாள்.

"ஹாய் மாமி,
எப்படி இருக்கேள்? இங்க நாங்க நாலு கப்ல்ஸ் சேர்ந்து நாயகராக்கு டூர் போயிருந்தோம். ரம்யா சொல்லி இருப்பாளே? இங்கே இயற்கை அழகு பிரமாதம். ஆனா ஒரு விஷயம் தன் கூத்தா போச்சு! எல்லாரும் மூக்கு பிடிக்க லன்ச் முடிச்சதும் ரமி தான் பண்ணின ஸ்வீட்டை எல்லாருக்கும் கொடுத்தா. என் ப்ரென்ட் அரவிந்த் அத வாயில வெச்சுண்டு கடிக்க முடியாம கடிச்சு..... அவனுக்கு பல் வலி வந்துடுத்து! அப்பறம் ரெண்டு கேள்ஸ் நெய் சரியில்லாததால அங்கேயே வாந்தி எடுத்துட்டா. ரமிக்கு வயிறு கொட கொடனு கொடைய ஆரம்பிடுசுத்து . அவசரத்துக்கு ரெண்டு மாத்திரையை போட்டுண்டு லபோ திபோன்னு அவசர அவசரமா கிளம்ப வேண்டியதா போயிடுத்து. அப்பறம் வீட்டுக்கு வந்து டாக்டர் அபாயின்மேன்ட் பிக்ஸ் பண்ணி... இன்னுமா சொல்லணும்? மாமி... இனிமேல் நீங்க ரமிக்கு எந்த ரெசிபியும் மெயில் பண்ணாதிங்கோ. ப்ளீஸ்... இனிமேல் இந்த மாதிரி ஸ்வீட் எல்லாம் பண்ணவே வேண்டாம்னுநு ரமி கிட்ட சொல்லிட்டேன்.
உங்க உடம்பை பாத்துக்கோங்கோ. மாமாவ கேட்டதா சொல்லுங்கோ.

வித் லவ்,
ராம். "

வாயை பொத்தியபடியே சிரித்தாள் பங்கஜம் மாமி.

இப்படியும் சிலர் !!!

சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றில் நான் படித்தது:

ராஜா முத்தையா செட்டியார் தன் அறுபதாம் வயது நிறைவு விழாவை 1941இல் கொண்டாடினார்.
பிராமணர்கள் 60 பேருக்கு மாடு, வீடு, வேட்டி, துண்டு தானம் செய்தார். பிராமணர் அல்லாதாரின் நலம் காக்கும் "ஜஸ்டிஸ்" கட்சியைச் சேர்ந்தவர் ராஜா முத்தையா செட்டியார். இவர் இப்படி பிராமணர்களுக்கு தானம் கொடுத்தது மூட நம்பிக்கை என்றும் சமுக விடுதலைக்கு எதிரான செயல் என்றும் காரசாரமாக ஒரு தலையங்கம் எழுதினார் அண்ணாதுரை.
அதை இ.வே.ரா.வின் "விடுதலை" பத்திரிகையில் வெளியிட முனைந்தார். இ.வே.ரா.வும் "கட்டாயம் எழுத வேண்டும், விடாதே", என்றார்.
காரணம் முத்தையா செட்டியார் தன் விடுதலை பத்திரிகைக்கு பணம் தரவில்லை என்ற கோபம் அவருக்கு.
அண்ணாதுரை எழுதிய தலையங்கம் அச்சு கோர்க்கப்பட்டு , அச்சு எந்திரதிலும் ஏறி விட்டது. அப்போது பார்த்து, முத்தையா செட்டியாரிடம் இருந்து அறுபதம் ஆண்டு விழா நினைவு பரிசாக இ.வே.ரா.,வுக்கு ஆயிரம் ரூபாய்க்கு செக் வந்து விட்டது.
உடனே அண்ணாதுரையை அழைத்து "அந்த தலையங்கத்தை அச்சிடதே" , என்றார் இ.வே.ரா. அண்ணாதுரை சம்மதிக்கவில்லை. "எழுதியது எழுதியதுதான்." என்றார். "சரி சரி. அதே கருத்தை நானே தலையங்கமாக எழுதி விடுகிறேன்...."என்று சொல்லி உப்பு சப்பில்லாமல், வழ வழா, கொழ கொழா என்று ஒரு தலையங்கத்தை எழுதி வெளியிட்டார் இ.வே.ரா.
காசுக்கு முன் கொள்கையாவது வெங்காயமாவது!!!